சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!!

329

 
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டது.

அத்துடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் ஆகியோரும் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும், அதனைத் தொடர்ந்தும் ஆசியும் வழங்கப்பட்டது.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மடு பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், மடு திருவிழாவில் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.