
கல்வித் தகைமையுடன் சிறந்த ஆற்றலையும் கொண்டவர்களுக்கே வடக்கு மாகாண அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை நேற்றுமாலை கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில் மாகாண அமைச்சர்களின் நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வடக்கு மாகாண அமைச்சர்களை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனே தெரிவு செய்வார் என்று நேற்றைய கூட்டத்தில் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்து, கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், முதல்வராகப் பதவியேற்ற பின்னர், அமைச்சர்கள் குறித்து முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.





