சொத்து அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக தனது சகோதரர் மற்றும் மேலாளர் மீது பொலிசில் முறைப்பாடு கொடுத்துள்ள நடிகை ரோஜா தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிர்வாகியும், பிரபல நடிகையுமான ரோஜா அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கம் பொலிசில் நேற்று முன்தினம் அளித்த முறைப்பாட்டில் கூறியிருப்பதாவது:
ரியல் எஸ்டேட் அதிபரும் எனது அண்ணனுமான ராம்பிரசாத் ரெட்டி, எனது மேலாளர் பிரசாத் ராஜு ஆகியோர், கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
எனது அண்ணனின் நடத்தை சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் நான் பேசுவதில்லை. நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை இருவரும் பறித்துக் கொண்டதால் இப்போது டிவியில் நடித்து சம்பாதித்து வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 3ம் திகதி ராம்பிரசாத் ரெட்டி, பிரசாத் ராஜு ஆகியோர் என்னிடம் வந்து உனது சொத்தை எங்களது பெயருக்கு மாற்றி எழுதித் தரவேண்டும். இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராயதுர்கம் பொலிஸ் அதிகாரி பாலகோட்டி கூறுகையில், நடிகை ரோஜா கொடுத்த புமுறைப்பாட்டின் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.