22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் டில்ஹானிக்கு வெள்ளிப் பதக்கம்!!

1382

இந்தியாவின் ஒடிஷா, புவனேஷ்வர் காலிங்க விளையாட்டரங்கில் வியாழனன்று ஆரம்பமான 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நதீஷா டில்ஹானி லேக்கம் வென்றுகொடுத்தார்.

வியாழன் இரவு 7.45 மணியளவில் ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 58.11 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து நதீஷா டில்ஹானி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

முதல் நான்கு முயற்சிகளில் முறையெ 52.92 மீ., 53.03மீ., 56.86 மீ., 55.68 மீ. தூரங்களைப் பதிவு செய்த டில்ஹானி ஐந்தாவது முயற்சியிலேயே 58.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
கடைசி முயற்சியில் அவரால் 56.14 மீற்றர் தூரத்தையே பதிவு செய்யமுடிந்தது.

இப் போட்டியில் சீனாவின் லீ லிங்வெய் 63.06 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் நான்கு தடைவைகள் 60 மீற்றர் தூரத்தைக் கடந்ததுடன் இரண்டு தடவைகள் அவரது வீச்சு விதிகளை மீறியதாக அமைந்தன. இந்தியாவின் அனு ராணி (57.32 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.