மன்னாரில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

250

 
மன்னார் – கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அவ்விடத்தில் அசாதாரணை சூழல் ஏற்பட்டுள்ளதுடன், இதனைத்தொடர்ந்து உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.