உலகின் மிகச்சிறிய இராச்சியத்தில் 11 பிரஜைகள் : அரசர் படகோட்டி!!

778

 
உலகிலேயே மிகச்சிறிய இராச்சியமான தவோலாராவில் 11 பிரஜைகளுக்கு அரசர் ஒருவர் உள்ளார்.

சாதாரண காற்சட்டை அணிந்து, ரப்பர் காலணியுடன் உணவு விடுதியொன்றை நடத்தி வரும் மிக எளிமையான அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட இராச்சியமே தவோலாரா தீவு.

இத்தாலியின் சர்டினியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த குட்டித்தீவு அமைந்துள்ளது.

இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே 5 சதுர கிலோமீட்டர் தான்.

அரசரின் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராவிற்கு சென்றால் அரசரைப் பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம்.

ஆடம்பரமில்லாமல் இயல்பாகத் தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180 ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடும் தவோலாரா இராச்சியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால், அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாகத் தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது இராச்சியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தைப் பெற்றது. அன்று முதல் இன்று வரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர்.

உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

”சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கிறது மிகப்பெரிய கடல்” என்கிறார் தவோலாரா இராச்சியத்தின் அரசர்.