வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்களால் சிறுவனுக்கு நடந்த கொடூரம்!!

472

கொதி நீர் மற்றும் மின்சார உபகரணத்தை பயன்படுத்தி பாடசாலை மாணவனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று மாவத்தகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாரினால் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த சிறுவனின் வாக்குமூலத்திற்கமைய மேலும் 2 சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 25 நாட்களின் பின்னரே பொலிஸாரினால் சந்தேக நபர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடிந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த சிறுவன், மாவத்தகம ஹிதகால்ல பிரதேச பாடசாலையில் 9ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.

கடந்த மாதம் 16ம் திகதி காலை சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மூவர் மின்சார ஹீட்டரில் நீர் கொதிக்க வைத்து அந்த நீரை சிறுவனின் உடலில் ஊற்றியுள்ளனர். பின்னர் ஹீட்டரில் சிறுவனின் முகத்தில் சூடு வைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் பிரதேச மக்களினால் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.