உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை : நெருங்கும் பேராபத்து!!

671

 
அண்டார்டிகா தீபகற்பத்தில் பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிக்கா.புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குரைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.

புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது.இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.

புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து பிரிந்துவிட்டது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை லண்டனை விட நான்கு மடங்கு பெரியதாகும். இந்த பனித் தகர்வால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின.

இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், நமது பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை இந்த பனித்தகர்வு நமக்கு காட்டுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பிரின்ஸ் கஸ்டவ் சேனல், லார்சன் இன்லேட், லார்சன் ஏ, லார்சன் பி, வேர்டி, முல்லர், ஜோன்ஸ் சேனல், வில்கின்ஸ் போன்ற ஒரு டஜனுக்கும் அதிகமான பெரிய அளவிலான பனியடுக்குகள் உடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.