நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துள்ளதாக நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் அளித்துள்ளார்.
நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆர்யா ஜோடியாக நடித்த ராஜா ராணி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து தனுஷ் ஜோடியாக நடித்த நய்யாண்டி படம் வரும் 11ம் திகதி வெளியாகிறது.
இப்படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
சற்குணம் மீதும் நய்யாண்டி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீதும் நடிகர் சங்கத்தில் நஸ்ரியா மோசடி புகார் அளித்துள்ளார்.
தனக்கு பதில் வேறு நடிகையை வைத்து சில காட்சிகளை படமாக்கி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நஸ்ரியா கூறியதாவது..
நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நய்யாண்டி படத்தில் எனக்கு பதில் டூப் நடிகையை பயன்படுத்தி சில கவர்ச்சி காட்சிகளை எடுத்துள்ளனர். நான் கேரளாவில் இன்னொரு படப்பிடிப்பில் இருந்தபோது இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்தது.
படத்தின் டிரெய்லரை பார்த்த தோழிகள் இதனை தெரிவித்தனர். நான் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக இயக்குனர் சற்குணத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டேன். அப்போது இன்னொரு நடிகையை டூப்பாக பயன்படுத்தி அந்த காட்சிகளை எடுத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
என்னிடம் அனுமதி பெறாமல் இக்காட்சிகளை எடுத்துள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். எனக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைத்து காட்சிகளை எடுத்து இருப்பது மோசடித்தனமாது. இதில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். நடிகர் சங்கத்தை நாடி உள்ளேன். சட்டப்படியும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு நஸ்ரியா கூறினார்.
இது குறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது இப்பிரச்சினை பற்றி நஸ்ரியா போனில் என்னிடம் பேசினார். புகாரும் அளித்துள்ளார். இதை விசாரித்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.