பருத்தித்துறையில் பெண்களின் கணனிகளில் ஆபாசப் படங்கள்!!

594

computer

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமூர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பிரதேச செயலர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை யாழ்.மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சமூர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இதில் ஒரு வங்கியில் பணியாற்றும் சமூர்த்தி முகாமையாளர், அந்த வங்கியில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைகளுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

பெண் உத்தியோகத்தர்கள் தினமும் அணிந்து வருகின்ற ஆடைகளைப் பார்த்து வர்ணிப்பதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுடன் இவர் மிகக் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் மிக அண்மித்த இடத்தில் வீடுகள் உள்ள உத்தியோகத்தர்களைக் கூட இவர் மதிய உணவிற்கு வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பதில்லையென்றும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் அலுவலகக் கணனியில் இவர் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்துள்ளார்.
தமது வேலைகளைச் செய்வதற்காக கணனியைப் பயன்படுத்திய பெண்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் குறித்த பிரதேச செயலருக்கு முறையிட்டுள்ளனர்.

ஆனால் சமூர்த்தி முகாமையாளருக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்காத பிரதேச செயலர், முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவரை வேறு சமூர்த்தி வங்கிக்கு இடமாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் இந்த விடயம் யாழ்.மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்தச் சங்கம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் ஆகியோரைக் கோரியிருந்தது.

இதன் பின்னர் குறித்த சமூர்த்தி முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச செயலர் இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமுர்த்தி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதேச செயலர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.