கடனைச் செலுத்துவதற்காக கணவன் வழங்கிய பணத்தை செலவு செய்த பின்னர் மயக்கமருந்து கொடுத்து தன்னை சிலர் வேன் ஒன்றில் கடத்தி சென்று பணத்தை அபகரித்ததாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ய வந்த பெண் ஒருவரின் போலி நாடகத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆண்கள் சிலர் தன்னை கடத்திச் சென்று அநுராதபுரம் நகரில் விட்டுச் சென்றதாக கூறி அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்து சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, அநுராதுபுரம் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி தம்மிகா டி சில்வா குறித்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவர் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட இடத்தை காண்பிக்குமாறு அழைத்து சென்றபோது, அப்பெண் பொய்யாக ஓர் இடத்தை காண்பித்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்த சீசீரிவி கெமராக்களை சோதனையிட முயற்சித்த போது முறைப்பாட்டாளர் பொலிஸாரை திசை திருப்ப முயற்சித்துள்ளார். அதன்போது சந்தேகம் கொண்ட பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவரது நாடகம் தெரியவந்துள்ளது.
பின்னர், கொழும்பில் பணியாற்றிவரும் அப்பெண்ணின கணவரை வர வழைத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கடுமையாக எச்சரித்து அவரது கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.