நாடு கடத்தப்படும் ஆபத்தில் இலங்கையர்கள் : பிள்ளைகளும் பிரிக்கப்படலாம்!!

236

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த எட்வட் ஸ்நோடன் 2013ம் ஆண்டில் முக்கிய இரகசியம் ஒன்றை கசியவிட்ட நிலையில், அவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி வந்து ஹொங்கொங்கில் சிறிது காலம் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், எட்வட் ஸ்நோடனுக்கு இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அடைக்கலம் கொடுத்திருந்தனர்.

அவர்களுள் இலங்கையைச் சேர்ந்த சுபுன் திலின கெல்லபத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஷி ஆகியோர் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் நாட்டவர்கள் தொடர்பான உரிய ஆவணங்களை வழங்கத் தவறியமையே இந்த நெருக்குதலுக்கு காரணம் என்றும் இவர்களது விசாரணைகளைக் கையாளும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேரினதும் பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்க விஸ்டா – ப்ளூவர் இடத்தில் எட்வட் ஸ்நோடன் தொடர்பிலான விசாரணையில் குறித்த ஏழு பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

எட்வட் ஸ்நோடன் தற்பொழுது ரஷ்யாவில் மறைந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தன்னைக் காப்பாற்றிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் என எட்வேட் ஸ்நோடன் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு காணொளி மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அகதிகளின் பிள்ளைகளும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை தடுக்க குறித்த அகதிகளின் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த அகதிகளின் அடைக்கலக் கோரிக்கையை ஹொங்கொங் அரசாங்கம் நிராகரித்த நிலையிலேயே இந்த அச்சம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுப்புன் கெல்லபாத்த, நதீகா நோனிஸ் அவர்களின் இரண்டு பிள்ளைகள் மற்றும் இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவரான அஜித் புஸ்பகுமார, பிலிப்பைன்ஸ் வாசியான வனேஸா ரொடெல் மற்றும் அவரின் மகள் ஆகியோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-