விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்!!

234

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே வீசப்பட்டு கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டதில் படுகாயமடைந்தார்.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுலைமா லெப்பை ஜனூஸ் (வயது 27) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

இவ்விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞரும், பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவரின் ஜனாஸா வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.