நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து வடக்கில் பணிப் பகிஷ்கரிப்பு!!

346

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். நல்லூர்ப்பகுதியில் வைத்து நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.

நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து நாளை வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இதன்போது வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட சங்கங்கள் அனைத்தையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.