11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 லட்சம் மக்கள் பரிதவிப்பு!!

335

இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 லட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை, திருகோணமலை, மஹாஓயா, பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் குடிதண்ணீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயக் காணிகளுக்கு சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்யப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மொரகஹாகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இப்போது நீர் வழங்கப்பட்டு வந்த போதிலும் அது காலங்கடந்த ஏற்பாடானதால் நீர் வெறுமனே விரயமாகிக் கொண்டிருக்கிறது.

2015, 2016ம் ஆண்டுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகள் சரியாக வழங்கப்படவில்லை. ஏக்கரொன்றுக்கு 8,650 ரூபா மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 ஆயிரம் ரூபா விவசாயக் காப்புறுதிக்கான தவணைப் பணமாகக் கழிக்கப்பட்டுள்ளது. இது ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை’ போலாகும் என அவர் விசனம் தெரிவித்துள்ளார்.