கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது.
59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார்.
உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார் ஜூ நாஜூவான். அங்கிருந்த போது, பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
”நாங்கள் கைது செய்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். எங்களிடம் இருந்த புகைப்படத்திற்கும் நேரில் பார்த்தவருக்கும் வித்தியாசம் இருந்தது. நாங்கள் இது எப்படி நிகழ முடியும் என்று ஆச்சரியப்பட்டோம்” என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாடு முழுதும் ரயிலில் பயணிக்க மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும், வங்கிக் கடன் அட்டைகள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரிக்குத் தேவையான செலவுகளைச் சமாளித்ததாகவும் நாஜூவான் கூறியுள்ளார்.
சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் கடந்த ஜூலை மாதம் புதிய அறிவிப்பு வெளியானது. நாட்டின் ஜிடிபியை அதிகரிக்க நுகர்வோருக்கு ஏராளமான கடன் அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டமை அறிவிப்பில் வௌியானது.
இதன்மூலம் ஏராளமான பொதுமக்கள் தற்போது கடனாளிகளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






