நீதிபதி இளஞ்செழியன் இலக்கு அல்ல : மீண்டும் அடித்துக்கூறும் பொலிஸ்மா அதிபர்!!

514

யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் நீதிபதி ஒரு கருத்தையும், பொதுமக்கள் ஒரு கருத்தையும் கூறுகின்றனர், நேரில் கண்ட சாட்சியாளர்கள் வேறு கருத்தை கூறுகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்டதல்ல என்றும், திடீரென ஏற்பட்ட ஒன்று என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி..

கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை யாழ். நல்லூர் பின் வீதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நீதிபதியுடன் 15 வருடங்களாக பணியாற்றிய ஹேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்று மறுநாள் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் பொலிஸில் சடணடைந்தார். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அவசர அறிக்கை..

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும், சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்திற்குள் பொலிஸார் வெளியிட்ட அவசர அறிக்கை தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததுடன், இது குறித்து முக்கியமான இரு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மீண்டும் அதே கருத்து..

இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல. நீதிபதி இலஞ்செழியனை இலக்கு வைக்கவில்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.