யெமனில் 2 இலட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்!!

577

யெமன் நாட்டில் 2 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Save the Children அமைப்பு தெரிவித்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு அரச கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் உள்ளன.

இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, ஏராளமானோர் பட்டினியால் வாடுகின்றனர்.

சுகாதார சீர்கேட்டால் பரவிய கொலரா நோயால் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்தும் கொலரா நோய் பரவி வருகிறது.
மக்கள் பட்டினியால் வாடுவதால், அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால், குழந்தைகளின் நிலைமை மிக மோசமாகியுள்ளது.

அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பை சந்திக்க நேரிடும் என சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான Save the Children கூறி இருக்கிறது.

இவ்வாறு 2 இலட்சம் குழந்தைகள் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, சர்வதேச சமுதாயம் ஏமன் நாட்டு குழந்தைகளைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.