தெற்காசியாவில் உயிர்வாழக் கடினமாகும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் : ஆய்வில் எச்சரிக்கை!!

547

2100-ஆம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரித்து, தெற்காசியாவில் உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும் என Science Advances என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

வட இந்தியாவின் பெரும்பகுதி, தெற்கு பாகிஸ்தான், வங்கதேசத்தின் சில பகுதிகள் மேலும் உஷ்ணமடைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் கங்கைநதிப் படுகையில் அடர்த்தியான மக்கள் தொகை நிரம்பிய பகுதிகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்ப அளவு மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக நோய்களும், அறிதல் திறன் குறைபாடுகளும் தோன்றும் என கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் நல்ல காற்று, நிழல் வசதி இருந்தும், உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட மரணமடையும் வாய்ப்புள்ளது.

கங்கைநதிக்கரை பகுதிகள், வடகிழக்கு இந்தியா, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதி, சோட்டா நாக்பூர் பீடபூமி, பாகிஸ்தானின் சிந்து சமவெளிப்பகுதி ஆகியவை வெப்ப நிலை அதிகரிப்பின் தாக்கங்கள் ஏற்பட்டு மனித உயிருக்கு அதி ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்கிறது இந்த ஆய்வு.