மணற்காடு பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை : தாயும், சகோதரியும் நீதிமன்றில் வாக்குமூலம்!!

665

யாழ்ப்பாணம் – மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அவரின் தாயும், சகோதரியும் நீதிமன்றில் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞரின் சகோதரியும் தாயும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து , சம்பவ தினத்தன்று இளைஞருடன் வாகனத்தில் பயணித்த ஏனையவர்களின் தகவல்களையும் அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை – மணற்காடு, ஆறாம் கட்டை பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற வாகனம் மீது கடந்த 9 ஆம் திகதி பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் துன்னாலை – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மணற்காடு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.