வவுனியா நங்கூரம் வி. கழகத்தினால் இரண்டு இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு!!

667

 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகம், கோவில்குளம் இந்துக் கல்லூரியின் 2007 உயர்தர பழைய மாணவர்களுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சர்வதேச கிளைகள் என்பவற்றின் ஒன்றிணைந்த அனுசரணையுடன் கடினபந்து துடுப்பாட்ட அணிக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான முழுமையான விளையாட்டு உபகரணங்கள் நேற்று (04.08.2017) கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வைத்து புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கத்தால் கல்லூரி முதல்வர் த.பூலோகசிங்கம் மற்றும் விளையாட்டு பொறுப்பாசிரியர் என்.சுந்தராங்கனிடம் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வைத்து வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் புளொட் அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினரும், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு ஜோயல் நிரோஷான், கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலய சமூகவியல் உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சத்தியமூர்த்தி , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் த.நிகேதன், அமைப்பாளர் வ.பிரதீபன், ஆலோசகரும் கிராமங்களுக்கான இணைப்பாளர் சதீஸ் ஆகியோருடன் பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.