வவுனியாவில் வாக்காளர் எண்ணிக்கையில் மாறுபாடு : விளக்கம் கோரி சிவசக்தி ஆனந்தன் எம்.பி கடிதம்!!

553

வவுனியா மாவட்டத்திற்குட்பட்டதான பிரிவுகளில் வாக்களர் எண்ணிக்கையில் காணப்படும் மாறுபாடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் செயலாளரும், வன்னிமாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாக்காளர்கள் இடாப்பிற்கும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கீழுள்ள வாக்களார் இடாப்பிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வாக்களார்கள் வித்தியாசத்தை தெளிவுபடுத்தப்படவேண்டும்.

குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வவுனியா தேர்தல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள 2016 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்களார்கள் பட்டியலில் 11747 பேரும், வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்களர்கள் பட்டியலில் 8577 பேரும், பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட பட்டியலுக்கிடையில் 3170 வாக்காளர்கள் வித்தியாசப்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா கிராமத்திலுள்ள வாக்களார்கள், நெடுங்கேணி பிரதேச சபை வாக்காளர்கள் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அத்துடன் 2015 ம் ஆண்டு வெடிவைத்தகல் கிராம சேவையாளர் பிரிவில் 18 பேரே வாக்களர்களாகக் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது இந்த கிராம சேவையாளர் பிரிவில் திடீரென 758 வாக்காளர்களாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது.

இந்த விடயம் தொடர்பாக நாம் ஏற்கனவே எல்லை மீள் நிர்ணயக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளதோடு இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி, அதற்கான விளக்கத்தை வழங்குமாறு கோரப்பட்டபோதும் அதற்கான பதில் இன்று வரை யாராலும் எமக்கு வழங்கவில்லை.

அப்பிரதேச மக்களின் இந்த கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியவர்களாகவிருப்பதால் இதற்கான விளக்கத்தை எனக்கு வழங்கி உதவுமாறு தங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதி வவுனியா மாவட்ட செயலாளர் றோகன புஸ்பகுமாரவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.