ஆட்டம் கண்டுள்ள இலங்கையின் பங்குச்சந்தை!!

1012

 

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த ஏழு நாட்களாக பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பங்குதாரர்கள் 56.47 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இந்த ஆண்டின் இரண்டாவது மிகப் பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பங்குச்சந்தை சுட்டெண்களான ASPI 1.91 சதவீதத்தாலும் S&P SL 20 ஆனது 1.40 சதவீதத்தாலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த விசாரணை காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போகும் என்ற காரணத்தினால் உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிரேஷ்ட பொருளியலாளர் லலித்சிறி குணருவான் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் நிதி நிலைமையை காட்டும் குறியீடான பங்குச்சந்தையின் வீழ்ச்சி எழுச்சி காணப்படாத போதிலும் இந்நிலைமை, இலங்கையின் நிதிமுகாமைத்துவமானது படுமோசமடைந்துள்ளமையினை சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், அரசாங்கம் வெளிநாட்டு நாணயங்களை ஒழுங்காக முகாமை செய்வதிலும் தவறு விடுகின்றது.

வெளிநாட்டு நாணய நிதியத்தின் தாக்கத்தால் இலங்கையின் கொள்கை வட்டிவீதத்தில் தளம்பல் ஏற்படும் என்ற அச்சம் மத்திய வங்கிக்கு காணப்பட்டது.

பங்குச்சந்தையும், பங்குச்சந்தையின் அலுவலக நாட்களான, போயா, விடுமுறை தினங்கள் தவிர்ந்த நாட்களான கடந்த ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் ஜூலை 24ஆம் திகதி வரையான ஏழு நாட்களில் வீழ்ச்சியடைந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.