வவுனியா தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் நீண்ட நாட்களாக குப்பை வீசிவந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் தண்டம் அறிவிடப்பட்டுள்ளதுடன் நீதவானின் கடுமையான எச்சரிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா தோணிக்கல், மதகுவைத்தகுளம் பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் இப்பகுதியை துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
எனினும் தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் சிலர் தொடர்ச்சியாக குப்பைகளை வீசி வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் பொது சுகாதாரப் பரிசோதகதர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது குறித்த வீதியில் குப்பை வீசிய அரச உத்தியோகத்தர் ஒருவரை 31.07.2017 அன்று கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 03.08.2017 நீதிமன்ற சட்ட நடவடிக்கையின்போது தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவான் அரச உத்தியோகத்தரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.
குறித்த பகுதியில் குப்பைகளை வீசுகின்றவர்களில் அனேகமானவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவே காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.








