வவுனியா வேப்பங்குளத்தில் கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் போடப்பட்டுள்ள எல்லைக்கல்லை உடைத்து குளக்காணியில் வேலி அமைத்துள்ளமையையடுத்து வேப்பங்குளம் கமக்கார அமைப்பினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்காலிகமாக அவ் காணியில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கடந்த 6மாதங்களுக்கு முன் பொதுமகன் ஒருவரின் காணியில் இவ்விடம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட குளக்காணியேன தெரிவித்து எல்லைக்கல்லையும் நாட்டினார்கள்.
அதன் பின்னர் கடந்த ஆறு வாரங்களுக்கு முன் காணியில் முன்னர் இருந்த எல்லைக்கல்லினை விடுத்து இன்னுமொரு இடத்தில் இவ்விடம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட காணியென தெரிவித்து எல்லைக்கல்லையும் நாட்டினார்கள்.
நேற்று அவ்விடத்திலிருந்த எல்லைக்கல்லை காணியின் உரிமையாளர் மண்ணை பதப்படுத்துவதற்காக இடித்து சேதமாக்கியுள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த வேப்பங்குளம் கமக்கார அமைப்பின் பிரதிநிதியொருவர் இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்காலிகமாக மண்ணை பதப்படுத்தும் வேலையை நிறுத்துமாறும் நாளைய தினம் வவுனியா கமக்கார திணைக்களத்திற்கு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் வினவிய போது, இக் காணியின் ஆவணக்கள் எம்மிடம் உள்ளது. இது எமது முத்தோர் வாழ்ந்த இடம். பொய்யான விடங்களை தெரிவித்து எமது காணியினை ஆக்கிரமிக்கப் பார்ப்பதாகவும் நாளைய தினம் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்று இவ்விடயம் தொடர்பாக கதைக்கவுள்ளதாகவும், பொலிஸாரின் வேண்டுகோளிற்கு இனங்க தற்காலிகமாக இக் காணியில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.
இக் குளக்காணியில் 10க்கு மேற்பட்ட பொதுமக்களின் வீடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















