கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

644

பிரான்ஸ் கடற்கரைக்கு அருகில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் உள்ள நைஸ் நகருக்கு அருகில் உள்ள கடலில் சரக்கு கப்பல் ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கரும்புகையை வெளியேற்றிக்கொண்டு இருந்த இக்காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் 6 படகுகளில் சென்ற 66 தீயணைப்பு வீரர்கள் கப்பலில் சிக்கியிருந்த 11 பயணிகளை பத்திரமாக கரைக்கு மீட்டுள்ளனர்.

எனினும், இவ்விபத்தில் காயம் அடைந்த ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிற்பகல் நேரத்தில் நிகழ்ந்த தீவிபத்தை தொடர்ந்து இரவு 10 மணியளவில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியுள்ளது.

கப்பல் மூழ்கியதை தொடர்ந்து அதில் இருந்த சில பொருட்கள் தண்ணீருக்கு மேல் மிதப்பதால் அவ்வழியாக கப்பல் மற்றும் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

40 மீற்றர் நீளமுள்ள இக்கப்பல் தற்போது சுமார் 650 மீற்றர் ஆழத்தில் தரையில் மோதி நின்றுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த இக்கப்பலில் தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.