நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் நாளான நாளை 18ம் திகதி திங்கட்கிழமை வீதி விபத்துக்களை தடுப்பதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இரண்டாம் நாளான 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலைத் தளங்களில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வீடுகளில் இடம்பெறும் விபத்துக்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் வாரத்தின் மூன்றாம் நாளான 20ம் திகதி புதன்கிழமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வியாழக்கிழமை 21ம் திகதி நான்காம் நாள் முன்பள்ளிப் பாடசாலைகளில் இடம்பெறும் விபத்துக்களைக் தடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இறுதி நாள் 22ம் திகதி பாடசாலை விபத்துக்களைக் தடுப்பதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் மணித்தியாலத்திற்கு ஒருவர் என்ற ரீதியில், நாளொன்றுக்கு 27 பேர் விபத்துக்களில் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பல்வேறு விபத்துக்களின் மூலம் வருடமொன்றிற்கு மொத்தம் 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதாரம், போஷாக்கு, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் திலக் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
மணித்தியாலத்துக்கு 480 பேர் என்ற விகிதத்தில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெறுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.