நாய்க்கு இரையாகிய பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய சிசு!!

765

பிறந்து ஏழு நாட்களே நிரம்பிய சிசுவொன்று, நாய்க்கு இரையாகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹபரன – நாமல்புர பிரதேசத்தில் நேற்று (17.09) பதிவானது.

ஏழு நாட்களுக்கு முன்னர் பிறந்த கவிஷ்க சந்தருவன் இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. தமது ஜீவனோபாயத்திற்காக தினமும் கூலி வேலை செய்யும் சமன்குமார மற்றும் நிரோஷா குமாரி ஆகியோருக்கு பிறந்த கவிஷ்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளை.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆறு நாட்கள் வீட்டிலிருந்த குழந்தையின் தந்தை, தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார்.

இதனிடையே வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனக்கு பசி என்று கூறி தாயிடம் உணவு கேட்ட போதிலும் அவளுக்கு கொடுக்க இந்த வீட்டில் எதுவும் இருக்கவில்லை.

இதனால் பாட்டியின் வீட்டுக்குச் சென்று ஒரு சுண்டு அரசி எடுத்துவருமாரு தாய் கூறிய பின்னர் இரண்டு பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.

ஏழு நாட்களேயான சிசுவை பாயில் வைத்துவிட்டு, அரசியை கழுவுவதற்கு நீரை எடுக்க 200 மீற்றர் தொலைவில் உள்ள கிணற்றுக்கு இந்த தாய் சென்றுள்ளார்.

கொண்டுவந்த அரிசியை பானையில் இட்டு சமைக்க ஆரம்பித்த போது சிசுவின் அழு குரல் கேட்டுள்ளது.

இதன்போது சிசு இருந்த இடத்திற்கு இந்த தாய் ஓடிய போது, தான் பெற்ற குழந்தையை நாய் ஒன்று கடித்துக் கொண்டிருக்கும் துயர் மிகு காட்சியை கண்டுள்ளார்.

நாயை விரட்டிய தாய் உடனே சிசுவை தூக்கி தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவ்வேளையில் கவிஷ்கவின் உயிர் பிரிந்திருந்தது.

தனது குழந்தையின் இறுதிக் கிரியையைக் கூட நிறைவேற்றுவதற்கு போதிய வசதி இல்லாத இந்தப் பெற்றோருக்கு தம்புள்ளை பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி செய்தனர்.