இலங்கையில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை : அதிர்ச்சி அறிக்கை!!

1024

இலங்கையில் சராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய இந்த வருடம் முதல் 6 மாத காலப்பகுதியில் 1,597 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையில் 1,275 பேர் ஆண்கள் என்றும், 322 பேர் பெண்கள் என்றும் தெரியவருகின்றது. 2015ஆம் ஆண்டு 2,389 ஆண்கள் உள்ளிட்ட 3, 058 தற்கொலைகள் பதிவாகியுள்ளன,

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 2,339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு 8,500 பேர் என பதிவாகியிருந்த தற்கொலைகள் 2005 இல் அரைவாசிக்கும் மேலாகக் குறைந்து 2015ஆம் ஆண்டில் 3,025 என்ற எண்ணிக்கைக்கு கீழிறங்கியுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் மனப்போக்கை மாற்றுவதற்கு இளைஞர்களை மையப்படுத்தி சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகள் பிரிவால் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் உளவள ஆற்றல் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.