பாடசாலை செல்லாது ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் சிறுவர்கள்!!

815

கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் அதிகளவான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாது பல்வேறு ஆபத்தான வேலைகளுக்கு செல்லும் நிலை காணப்படுவதாக இப்பகுதி பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி கல்மடுநகர் நாவல்நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கூடுதலான சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலமை காணப்படுவதுடன், இவ்வாறு பாடசாலை செல்லாத சிறுவர்கள் மணல் அகழ்வுகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இப்பகுதி பொதுமக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பகுதியில் வாழும் குடும்பங்களில் அதிகளவான குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாக காணப்படுவதனால் இவர்களது குடும்ப வருமானத்தை கருத்திற்கொண்டு பல சிறுவர்கள் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதாகவும் சில பெற்றோர்கள், உறவினர்களின் அக்கறையீனங்களால் பலர் இவ்வாறு பாடசாலைக்கல்வியை விட்டு வேலைகளுக்கு செல்வதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான சிறுவர்களின் எதிர்காலம் குறித்துகவலைப்படும் அவர்கள், இவர்களை கற்றல் செற்பாடுகளில் அல்லது தொழில் சார் கற்கை நெறிகளில் இணைத்து இவர்களின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.