
இங்கிலாந்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் இந்தியப் பெண் ஒருவர் இறந்த குழந்தையை 2 நாட்களாக வயிற்றில் சுமந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்பவர் பொறியியல் நிபுணர் வேலை காரணமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார்.
அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18ம் திகதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட திகதியை தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை.
மேலும் குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள்.
அங்கிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்துவிட்டு முதல்நாள் நிரஞ்சனாவிற்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை என்றும் பின்னர் மருத்துவமனையில் இருந்த இதயத்துடிப்பு அறியும் கருவி சரிவர வேலை செய்யவில்லை எனவும் ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அவர் மீண்டும் குழந்தையின் நிலை குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு மேல் இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு மிக்க வலியுடனும், வேதனையுடனும் எந்தவிதமான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் பிரசவித்துள்ளார்.
அதைவிட வேதனை தரும் விடயமாக அந்தக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடிய பொறுப்பாளரை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறிய நிர்வாகம் நான்கு நாட்கள் கழித்துதான் அதனையும் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 24ம் திகதி மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்த புகார் ஒன்றினை இந்தத் தம்பதியினர் அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தில் அளித்துள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தேசிய சுகாதார மையத்தின் விசாரணைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




