இலங்கை மாணவர்களுக்கு பகுதி நேர தொழில் வாய்ப்புடன் ஜப்பானில் உயர் கல்வி வாய்ப்பு!!

606

Japan-Flag_CI

இலங்கை மாணவர்களுக்கு பகுதி நேரத் தொழில் வாய்ப்புடன் ஜப்பானில் உயர் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கையில் இலங்கை உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்னவும், ஜப்பான் தொடர்பாடலுக்கான சர்வதேசப் பாடசாலையின் பிரதம பணிப்பாளர் டொமோகிரோ அன்ரகுவும் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக ஜப்பான் இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் நாயகம் ஒதாசி மொட்டயுகி மற்றும் டொமொகிரு அன்ராகு ஆகியோர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று கடந்த வார இறுதியில் கொழும்புக்கு வருகை தந்திருந்தது.

இக்குழுவினர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தியுள்ளனர். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் குறிப்பிட்டதாவது..

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான கல்விப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்நாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழேயே நாம் இலங்கை உயர் கல்வி அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து இருக்கின்றோம்.

இத்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு ஆரம்பப் பகுதி முதல் இலங்கை மாணவர்கள் எமது கல்லூரிக்குச் சேர்க்கப்படுவார்கள். வருடத்திற்கு நான்கு தடவைகள் மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஒரு தடவைக்கு ஐம்பது மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். தற்போது இலங்கையை சேர்ந்த பத்து மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

எமது கல்லூரி ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் அமைந்துள்ளது. இங்கு தற்போது 23 நாடுகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு கல்வி கற்போர்களுக்கு தங்குமிட வசதி, சுகாதார காப்புறுதி, உணவு என்பன இலவசமாக வழங்கப்படும். அவர்கள் கற்கை நெறிக்கே பணம் செலுத்த வேண்டும். அதனைத் தவணை அடிப்படையில் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் பாடசாலைகளில் 13 வருடங்கள் கல்வி கற்ற 18-35 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எமது கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். ஜப்பானில் கல்வி கற்க வருகை தருகின்ற வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 2020ம் ஆண்டாகும் போது 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது என்றும் அவர் கூறினார்.