சிறுமிக்குச் சூடு வைத்த தாய்க்கு பிணை!!

486

தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில் தனது 7 வயது மகளுக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட தாயை பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி நேற்று முன்தினம் (20.09) பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபரை தலா ஒரு இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியுள்ளதுடன், வழக்கு விசாரணையை அடுத்த வருடம் (2018) பெப்ரவரி மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு சென்றிருந்த குறித்த சிறுமி வீடு திரும்பும்போது அவள் அணிந்திருந்த மோதிரம் இல்லாதிருப்பதை அவதானித்த தாய் சிறுமி மீது சூடுவைத்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் கடந்த சனிக்கழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

சிறுமியின் அவலக் குரல் கேட்ட அயலவர்கள் இந்த விபரீதத்தை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தாயைக் கைது செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.