வேண்டுமென்றே இலங்கை தோற்றதாக குற்றச்சாட்டு : சர்ச்சையை தீர்க்க இலங்கை அணி வீரர்கள் கோரிக்கை!!

818

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.

போட்டிக்கு முன்னதான வீரர்களின் சந்திப்பில், சம்பந்தமே இல்லாத ஒருவர் கலந்துகொண்டமை, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றால் என்ன செய்வது என்ற அணியின் தீர்மானத்தை அணித் தலைவர் மாற்றியமைத்தது, போட்டியின்போது உரிய அனுமதி அல்லது வழிகாட்டல் இன்றி பின்வரிசை வீரர் ஒருவர் முன்வரிசையில் ஆடச் சென்றது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய தெரிவித்திருந்தார்.

இவை இயற்கைக்கு மாறான செயல்கள் என்றே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைக் கடுமையாக நிராகரித்திருக்கும் அணி வீரர்கள், அவை குறித்து ஆய்வு நடத்துமாறும், முடியுமானால் தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய நிரூபித்துக் காட்டட்டும் என்றும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.