சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள சாதனைத் திருமணம்!!

508

 
இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் ஒசரி புடவையை பிடிப்பதற்கு சீருடையிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டமை சர்ச்சையான விடயமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணை செய்யும் அளவுக்கு பல்வேறு மட்டங்கள் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

அலவத்துகொட சரத் ஏக்கநாயக்க பாடசாலையின் 2500 மாணவர்கள் புடவையை ஏந்திப் பிடிக்க ஈடுபடுத்தப்பட்டனர். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் கின்னஸ் சாதனை நடத்தும், நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் இலங்கைக்கு சர்வதேசத்தினால் பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்த போதிலும் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற டெலிகிராப் போன்ற பிரபல செய்தி சேவைகளினால், இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணத்தில், சிறுவர்கள் குழந்தை தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கார்டியன், பிரான்ஸ் செய்தி சேவைகள் உட்பட சர்வதேச ஊடகங்களும் இவ்வாறே செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான கொள்கைகளுக்கமைய, பல வருடங்களுக்கு முன்னரே குழந்தை தொழிலாளி சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்கை குறித்து கருத்திற்கொள்ளாமல் இலங்கையில் இன்னமும் குழந்தை தொழிலாளி சேவை முன்னெடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் கண்டி திருமண நிகழ்வு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.