
இந்திய, தானேவில் தங்களின் விருப்பத்திற்கு எதிராக தங்களின் மகனை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தலையை மொட்டையடித்த மாமனார், மாமியார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் உயர் சாதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்தார். யோகேஷின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் யோகேஷின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் பிவான்டி தாலுகாவில் உள்ள பாலி கிராமத்தில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி அந்த தம்பதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் யோகேஷின் குடும்பத்தார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதேவில் உள்ள தங்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வீட்டு வாசலில் இளம் சோடியை அவர்கள் கட்டிப்போட்டனர். அவர்கள் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, தலையை மொட்டயைடித்து தாக்கினர். இதை யோகேஷின் சகோதரர் ஒருவர் மொபைல்போனில் படம் எடுத்துவைத்து இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மைதே கிராமத்து தலைவர் சந்தோஷ் பாட்டில் சம்பவ இடத்திற்கு வந்து இளம் சோடியை மீட்டு பாட்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். யோகேஷை திருமணம் செய்ததால் தன்னை தனது மாமனார், மாமியார் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக அப்பெண் நேற்று புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் யோகேஷின் பெற்றோர் மதுகர் பாட்டில், மால்டி பாட்டில் மற்றும் அவரின் அண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




