புகைப்படப் பிடிப்பின்போது ஏரிக்குள் பாய்ந்த மாப்பிள்ளை : நடந்தது என்ன?

747

திருமணக் கோலத்தில் இருந்த மாப்பிள்ளை, திடீரென ஏரிக்குள் பாய்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரி அருகே திருமணத் தம்பதியரின் புகைப்படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கிளேடன் என்ற மணமகனும், ப்ரிட்னி குக் என்ற மணமகளும் புகைப்படக் கலைஞரின் கட்டளைகளுக்கு ஏற்ப இப்படியும் அப்படியுமாக மாறி மாறி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரெனக் கலவரமான மணமகன் ஓடிச் சென்று ஏரியில் பாய்ந்தார், அதுவும் அவரது திருமண ஆடையுடனேயே! அப்போதுதான், அந்த ஏரியில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்து மூழ்கிக் கொண்டிருந்ததை மற்றவர்கள் கண்டனர்.

நீருக்குள் பாய்ந்த வேகத்தில் சிறுவனைப் பிடித்து இழுத்துக் கரைசேர்த்தார் மணமகன். பின்னர், முற்றாக நனைந்த திருமண ஆடையுடன் அவரும் கரையேறினார்.

இந்த நிகழ்வைக் கச்சிதமாகப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர், அதை சமூக வலைதளத்தில் பதிவேற்ற, இப்போது அந்த மணமகனுக்கு ஏகப்பட்ட வரவேற்பும், பாராட்டும்!