ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள்.
இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவுகள் மூலமாக அன்றி, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றும் அவர் கோரியிருந்தார். எனினும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
“சுயாட்சிக்கு ஆதரவாக முடிவுகள் வந்திருப்பதையடுத்தே பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகியிருக்கிறது” என்று குர்திஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.






