அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் குறைப்பு!!

611

8 வகையான அரிசி மற்றும் நெத்தலி கருவாடு ஆகிய 9 பொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச்செலவு உபகுழுவின் முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெள்ளை நாட்டரிசி ஒருகிலோ 77 ரூபாவில் இருந்து 74 ரூபாவாகவும், வெள்ளை அரிசி ஒருகிலோ 68 ரூபாவில் இருந்து 65 ரூபாவாகவும். சம்பா அரிசி ஒருகிலோ 89 ரூபாவில் இருந்து 84 ரூபாவாகவும், சிவப்பரிசி ஒரு கிலோ 77 ரூபாவில் இருந்து 75 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி ஒருகிலோ 83 ரூபாவில் இருந்து 80 ரூபாவாகவும்.

வெள்ளை சம்பா ஒரு கிலோ 94 ரூபாவில் இருந்து 90 ரூபாவாகவும், சிவப்பு சம்பா ஒரு கிலோ 90 ரூபாவில் இருந்து 88 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி ஒருகிலோ 539 ரூபாவில் இருந்து 525 ரூபாவாக விலை குறைக்கப்பட்டுள்ளதோடு, இது அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவாகும்.

அது மாத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களிலும் சுப்பர் மார்க்கட்டிலும் விற்கப்படும் அனேகமான அத்தியவசியப் பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் வெகுவாகக் குறைத்து பின்வரும் விலைகளில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சதொசவில் விற்பனையாகும் மற்றும் சில பொருட்களின் விலைகள்

பெரிய வெங்காயம் – ரூபா 125
உருளைக்கிழங்கு – ரூபா 130
டின் மீன் 400g – ரூபா 130
லங்கா சதொச பால் மா – 400g ரூபா 305
லங்கா சதொச பால் மா – 1Kg ரூபா 760
சீனி – ரூபா 107
பருப்பு – ரூபா 152
கோதுமை மா – ரூபா 86 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.