
வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
உயிரிழந்த நிமலரூபனின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் நீதிமன்றத்திடம் விளக்கினார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார்.
இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள தலைமை நீதியரசர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இவ்வாறான வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதன்மூலம், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் தலைமை நீதியரசர் தெரிவித்தார்.
எனவே குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.




