வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் (01.10.2017) 220வது நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் பல பகுதிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் அரசியல் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் நேற்று (01.10.2017) காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே? , இந்த அரசை பாதுகாக்க என்.ஜி.ஓ க்களின் உலகை ஏமாற்றும் சிறுவர்கள் தினமா? என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை போராட்ட இடத்திற்கு முன்பாக தொங்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.