கொக்குவிலில் நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.
கொக்குவில் சந்தி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் சந்தியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து அருகில் உள்ள கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர்.
பின்னர் வெளியில் வந்து கடைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளனர் என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கடைஉரிமையாளர் யாழ்.காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






