அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோய் இருப்பதாக பொய் கூறியதால் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பெல் கிப்சன்(25). இவர் இயற்கை மருத்துவத்தின் மூலம் தனது புற்றுநோய் குணமடைந்ததாக கூறி, அவுஸ்திரேலியாவில் பிரபலமானார்.
அதன் பின் சமூக வலைத்தளங்களில், ஆயுர்வேத மருத்துவம், பிராணவாவு சிகிச்சை, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை இல்லாத உணவு முறை ஆகியவற்றின் மூலம் தான் தனது புற்றுநோய் தீர்ந்ததாக கூறி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
அந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால் அந்தப் பணம் எந்த தொண்டு நிறுவனத்தையும் சென்று சேரவில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் கூறியது அனைத்துமே பொய் என்று தெரியவந்ததால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பெல் கிப்சன் தான் கூறியது பொய் என்று ஒத்துக் கொண்டதால் வாசகர்களை ஏமாற்றியதற்காக அவருக்கு 3,22,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.






