அமெரிக்காவில் தந்தை தண்டித்ததில் மாயமான 3 வயது சிறுமி : பொலிசார் நடவடிக்கை!!

933

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பால் அருந்தாததை அடுத்து தந்தை ஒருவர் தமது 3 வயது சிறுமியை தண்டித்ததில் சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் புறநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ்(37). இவரது 3 வயது குழந்தை ஷெரின் தான் சனிக்கிழமை இரவு முதல் மாயமானதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குறித்த சிறுமி பால் குடிக்காததை அடுத்து தங்கள் குடியிருப்பின் வெளியே தண்டனை என்ற பெயரில் அவரது தந்தையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கால் மணி நேரம் கடந்து சிறுமியை சென்று பார்த்த அவர் தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த சிறுமி அங்கிருந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் இறங்கிய குடும்பத்தினர், சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 3 வயது சிறுமியை நள்ளிரவில் ஆபத்தில் விடுவித்த குற்றத்திற்காக வெஸ்லியை கைது செய்துள்ளனர்.

வெஸ்லி குடும்பம் இந்தியாவில் பிறந்த ஷெரினை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அமெரிக்கா கொண்டு வரும் முன்னதாக சிறுமி ஷெரின் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாயமான சிறுமியை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.