பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
14 நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பலர் அவரை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள தியாகுவும் மாலையில் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக்கொண்டார்.