யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பும் முகமாக ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனம் வவுனியா கிராமிய பெண்கள் அமைப்புடன் இணைந்து உதவித்திட்டங்களை செய்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தின் புதியவேலர்சின்னக்குளம், மகிழங்குளம், விளக்குவைத்தகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்களுக்கு சுகாதாரமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் முகமாக பில்டர்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 40 பெண்களுக்கு அவர்களின் சிறுதொழிலை விருத்தி செய்யும் முகமாக வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த யூலைமாதம் இப்பகுதியில் 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார எழிச்சிக்காக வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் தோட்டச் செய்கை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயசித்ரா, ரக் அவுட்றீச் மலேசியா நிறுவனத்தின் தலைவர் டொக்டர் செல்வமலர் ஜயாத்துரை, இந் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த அமராவதி நவரத்தினம், முரளி ஜெகநாதன், சிறுவர்கல்வி அபிவிருத்தி இணைப்பாளர் மனோகரி ராஜகோபால், கிராமிய பெண்கள் அமைப்பின் திட்ட இணைப்பாளர் பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.






