ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 359 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய அணியின் ஜோர்ஜ் பெய்லி 50 பந்துகளில் 92 ஓட்டங்களை குவித்தார். பிலிப் ஹக்ஸ் 103 பந்துகளில் 83 ஓட்டங்களையும், ஷேன் வட்சன் 59 ஓட்டங்களையும், மக்ஸ்வெல் 32 பந்துகளில் 53 ஓட்டங்களையும், ஆரன் ஃபின்ச் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் வினய்குமார் 2, அஸ்வின் 1 விக்கெட் விழ்த்தினர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 360 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தவான் 86 பந்துகளில் 95 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 141 ஓட்டங்களையும், விராத் கோலி 52 பந்துகளில் 100 ஓட்டங்ளையும் எடுத்தனர்.