கந்துவட்டி கொடுமையில் தீக்குளித்த 4 பேரில் 3 பேர் உயிரிழப்பு!!

774

 
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2).

இசக்கிமுத்து நேற்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர்.

அந்த நேரத்தில் இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.

அப்போது மண்எண்ணை வாடை அடித்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இசக்கி முத்துவை தடுக்க ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். இதில் அவர்கள் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது.

அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். அவர்கள் மீது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களின் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.