வடகொரிய ராணுவத்தினரின் உண்மை முகம் அம்பலம் : வெளியான புகைப்படங்கள்!!

713

 
உலக நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் அச்சுறுத்திவரும் வடகொரியா உண்மையில் தமது ராணுவத்தை கட்டுக்கோப்பில் வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வல்லரசு நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் அச்சுறுத்தி வருகிறார். இதனால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் மன்றம் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் உலகின் சிறந்த ராணுவம் என வெளிக்காட்டிக்கொள்ளும் வடகொரிய ராணுவத்தினர் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் சாலை ஓரத்தில் தூங்கி ஓய்வெடுப்பதாகவும், பெண் ராணுவ வீரர் ஒருவர் குதிகால் செருப்புடன் பணியில் இருப்பதாகவும், மற்றொரு புகைப்படத்தில் 6 பேர் அமர்ந்து செல்லக் கூடிய வாகனத்தில் 14 பேர் பயணம் செய்வதாகவும் உள்ளது.

மேலும் தென் கொரிய எல்லையில் பணியில் இருக்கும் ராணுவத்தினர் எதிரி நாடு என்ற உணர்வே இன்றி இருப்பதாகவும் குறித்த புகைப்படங்களை எடுத்த கலைஞர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் புகைப்படம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் மட்டுமே புகைப்படங்களை வெளியே கொண்டு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்திய ராணுவ நிபுணர்கள், வடகொரியாவின் ராணுவத்தினரின் நிலை கவலைக்கிடம் என ஒப்புக்கொண்டாலும், குறைத்து மதிப்பிடுவது தவறு எனவும், கிம் ஜோங் வுன் இதுபோன்ற ஒரு சில ராணுவ வீரர்களை நம்பி கண்டிப்பாக வல்லரசு நாடுகளை அச்சுறுத்தல் விடுக்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.