விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு சம்பளத்தில் வெட்டு : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!!

290

Actசினிமா படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் சி.டி. வெளியீட்டு விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் முன்னணி நடிகைகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த படங்களை விளம்பரபடுத்த நடிகர், நடிகைகளை வைத்து பத்திரிகையாளர் மற்றும் ஊர் ஊராக அவர்களை அழைத்து போய் ரசிகர்களை சந்திக்க வைத்தல் போன்றவற்றை நடத்துவது உண்டு. ஆனால் இவற்றில் நடிகர்கள் மட்டும்தான் பங்கேற்கின்றனர். நடிகைகள் வருவது இல்லை.

பொதுவாக நடிகைகள் டப்பிங் பேசுவதற்கு முன்புதான் முழு சம்பளத்தையும் செட்டில் செய்வது வழக்கம். ஆனால் தமிழில் டப்பிங் பேச தெரியாத கதாநாயகிகள் படப்பிடிப்பு இறுதி நாளில் நிலுவை சம்பளம் முழுவதையும் வசூலித்து வருகிறார்கள். அதன் பிறகு அவர்களை படங்கள் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பிடிக்க முடிவதில்லை. இசை வெளியீட்டு விழாக்களுக்கும் வருவது இல்லை.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு சம்பளத்தை முன் கூட்டியே கொடுக்காமல் சுமார் 20 சதவீதம் வரை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, டாப்சி, லட்சுமி மேனன், நஸ்ரியா என பல நடிகைகள் வருகிறார்கள். இவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று மாலை சங்க அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்துக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர்கள் டி.ஜி. தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதில் நடிகைகளுக்கு சம்பளத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.